ஜனவரி 28, 2014

தவம்

தவம்   கிடக்கின்றேன்
தாய்மைக்காக ...............

எனக்குள்  கருவாய்
எனக்குள்  உயிராய்
எனக்குள்
எட்டி  உதைக்கப்  போகும்
உன்   பிஞ்சுப்  பாதம்
இப்  பூமியில்
கால்படும்   நாளை  எண்ணி
காத்திருக்கின்றேன் ................

என்   மூச்சுக் காற்றை
நீ   சுவாசிக்கப் போகும் 
நாளுக்காக
காத்திருக்கின்றேன் ..............

நொடிகளாய்
நிமிடங்களாய்
மணித்  துளிகளாய்
நாட்களாய்
மாதங்களாய்
வருடங்கள்   மட்டும்
கடந்து   செல்கின்றது ................
தினம்   அதே   பயணம்
தினம்   அதே  தேடல்
எனக்குள் .................

என்   தேடல்   நீ
விடியலாய்
என்   வாசலுக்கு
வந்து   விடு ..............
உன்னைச்   சுற்றி
என்   உலகம்   சுழல
தவம்   கிடக்கின்றேன் ...............

எங்கள்   வேண்டுதல்களை
விண்ணப்பங்களாய்
எல்லா   மத   கடவுள்களுக்கும்
விண்ணப்பித்திருக்கின்றோம் ..............
எங்கள்   விண்ணப்பங்கள்
ஏற்றுக்   கொள்ளப்படும்
நாளுக்காக
காத்திருக்கின்றோம் .......................

ஜனவரி 22, 2014

சோகம்

சிலருக்கு   சோகம்
ஊற்று  நீர்   போல ............
அவ்வப்போது   மனமென்னும்
மணல்   மேட்டில்
ஊறிக்   கொண்டேயிருக்கும் .............
ஊற்று  நீர்   போல்   சோகம்  வேண்டாம் ............
ஊற்று  நீர்   போல்   உற்சாகம்   வேண்டும் .............

சிலருக்கு   சோகம்
ஆற்று   நீர்   போல ............
 மனதில்   ஓரிடத்தில்   நிற்காமல்
வாழ்க்கைப்    போகும்   வழியில்
விதி   போகும்   வழியில்
ஓடிக்   கொண்டேயிருக்கும் .............
ஆற்று   நீர்   போல்
 நிற்காமல்......
சோகத்தைக்   கூட
அடித்துச்   செல்ல   வேண்டும் ..............

 சிலருக்கு   சோகம்
கடல்    நீர்   போல ............
கண்ணீரில்   கரைந்து    கொண்டு
வற்றாத   சோகம்
தீராத   சோகம்   என்று
கடல்   போன்ற    வாழ்க்கையை    பார்த்தே
தினம்   பயந்து   ஓட  வேண்டியுள்ளது .................
சோகக்   கடலுக்குள்
மூழ்கி   விட   வேண்டாம் .............
அதிலும்   மூழ்கி
முத்தெடுக்க   வழி   தேடுங்கள் ...............

இறுதியில்   நம்   உடல்
அஸ்தியாய்
கரைவது   கடலில்   தான்
என்றாலும்
ஆற்று   நீர்   போல்   ஓடி
வாழ்க்கையின்   அழகான
ஒவ்வொரு  நிமிடங்களிலும்
அங்கங்கே   அருவியாய்
துள்ளிக்  குதித்தும் ..........
அங்கங்கே   மேடு  ,  பள்ளம்
தாண்டியும் ............
அங்கங்கே   இளைப்பாறியும் ............
அங்கங்கே   சோகங்களை
தொலைத்து   விட்டும் ...............
வழி   தெரியும்   பாதையில்
பயணம்   செய்தால் ,
இறுதியில்
கடலில்   கலக்கும்   வரை
கலங்கத்   தேவையில்லை ....................