ஜூலை 13, 2021

முதுமையை போற்று



இனிமை  தரும்  இளமையில் 
வெறுமையை  உணரும்  முதியவர்க்காக 
நேரம்  ஒதுக்குங்கள் ........ 

தோளில்  நம்மைத்  தூக்கித் திரிந்தவர்கள் 
தளர்ந்து  போகும்  போது 
தாங்கிக்  கொள்  உனது  தோள்களில் .........

நிற்க  நேரமில்லாமல் 
நமக்காக ஓடி உழைத்தவர்கள் 
போற்றப்  பட  வேண்டும்  முதுமையிலும் .......
அவர்கள்  தந்த 
அன்பு,, அரவணைப்பை 
இரட்டிப்பாக  திருப்பித்  தர வேண்டும் 
அவர்களின்  முதுமை காலத்தில் ........

நம்  தேவைகளை மட்டுமே 
தீர்க்கத்  தெரிந்தவர்களுக்கு 
அவர்கள்  தேவைகளை  கேட்கவே தெரியாது ......
நமக்கு  வெளிச்சம்  கொடுத்த 
அவர்களது  உலகம் 
என்றுமே  இருண்டு  விடக்  கூடாது .......

வேதனைகள்  இல்லாமல் 
நம்மை  வளர்த்தவர்களை 
வேதனைப் படுத்தி  விடாதீர்கள்  முதுமையில் .......
நமக்காக  தூக்கம்  தொலைத்தவர்கள் 
துயரப் படக்  கூடாது  முதுமையில் ........

முதியோரை  மதிக்கத்  தெரியாத  மனிதர்கள் 
மண்ணில்  பிறந்தும்  பயனில்லை ........
போற்றுவோம்  முதுமையை ........
அகற்றுவோம் முதியோர் இல்லங்களை .........
 

ஜூலை 12, 2021

விதிகள்


சிரித்தாலும் , அழுதாலும் 
சிந்தும்  கண்ணீர்  ஒன்று  தான் ........
சுகமோ , சுமையோ 
தாங்கும்  தோள்கள்  ஒன்று  தான் ..........
வெற்றியோ , தோல்வியோ 
வாழ்க்கை  ஒன்று  தான் .........

திருப்பங்கள்  நிறைந்த 
வாழ்க்கைப்  பாதையில் 
எதையும்  எதிர்கொண்டு 
பயணிக்க  கற்றுக் கொள் ..........
ஏற்க  முடியாத 
வலிகள், ஏமாற்றங்கள் கூட 
கடந்து  போகக்  கூடும் .........

இருக்கும்  ஒரு  வாழ்க்கையை 
இறக்கும்  வரை 
ரசித்து  வாழக்  கற்றுக்கொள் .........
ரசிக்க  கூட  மறக்கலாம் 
ஆனால்  
வெறுத்து மட்டும் 
விடாதே .........

வீழ்ந்தாலும் 
வெல்வதற்கு  போராடு ........
விதியைக்  கூட 
மாற்றி  எழுதலாம் ...........


மரங்கள்


மண்ணில்  விழும்  விதைகள்  எல்லாம் 
செடியாய்  தளிர்ப்பதில்லை .........
தளிர்த்த  செடிகள்  எல்லாம் 
ஓங்கி  மரமாய் வளர்வதுமில்லை .........
வளர்ந்த  மரங்கள்  எல்லாம் 
பல்லாண்டுகள்  வாழ்வதும்  இல்லை..........

தினம் போராடி வளர்ந்த மரத்தினை
நொடிப் பொழுதினில்
வேரொடு வெட்டியெறிந்து
வீழச் செய்யும் மனிதர்களே
சற்று சிந்தியுங்கள் .........
வீழ்வது இன்று மரங்கள் என்றாலும்
நாளை வீழப்போவது மனிதர்களே.........

தாகம் தீர்க்க மழையையும்
உயிர் காக்க ஆக்ஸிஜனையும்
இலவசமாய் வழங்கி
உதவிக்கரம் நீட்டும்
மரங்களின் கைகளை இன்று வெட்டினால்
நாளை கையேந்த வேண்டியிருக்கும்
நீருக்காக .........
மூச்சுக் காற்றிற்காக .........

காத்திடுவோம்  காடுகளை .....
விட்டுச் செல்வோம்
பசுமை போர்த்திய பூமியாய் .....
நாளைய தலைமுறையும்
வாழ்வதற்காக............

சிகரெட்

 

கொஞ்சம்  கொஞ்சமாய் 
உன்னைக்  கொல்லும்  என்னை 
ஏன்  கைகளில்  வைத்து  கொண்டாடுகிறாய் .........
விற்பனைக்கு  இங்கு  தடை  இல்லை  என்பதாலோ ?......

உன்  உடம்பை  உருக்கும்  என்னை 
ஏன்  உருகி  உருகி  தேடுகிறாய் .........
உன் வலிகளுக்கு  மருந்தல்ல  நான் 
என்னை  தூக்கி  எறிந்து  விடு .........

கரம்  பிடித்தவளின்  கண்ணீர்  துடைக்க 
என்னை  கை விட்டு  விடு .........
உலகமென  உன்னைச்  சுற்றிச்  சுழலும் 
உறவுகளின்  வார்த்தைகளை  மட்டும் 
உதறிச்  செல்லாதே .........

மாற்றங்கள்  உனக்குள்  தளிர்விட்டால் 
மகிழ்ச்சி  பூக்கும் 
உன் வீட்டுத்  தோட்டத்தில்.........

ஜூலை 10, 2021

அடையாளங்கள்

மணமான பெண்களுக்கு
விரல்கள் அடைபடும் " மெட்டிக்குள் "
கழுத்து அடைபடும் " தாலிக் கயிற்றுக்குள் "
விடுபட விருப்பமில்லாத
ஏற்றுக் கொள்ளப்பட்ட
சமுதாயச் சடங்குகள் ..........
ஏன் இத்தனை அடையாளங்கள் , சடங்குகள்
பெண்களுக்கு மட்டும் ? .......


ஏப்ரல் 08, 2020

வாழ்க்கை ஒரு வரம்

எதிலும்  குறை காணும்  மனிதர்களுக்கு
என்றும்  நிறைவே  இல்லை ..........
குறைகளை  பட்டியலிட்டு
வீணடிக்காதே
மீட்க  முடியாத  மணித்துளிகளை ...........

குழந்தையின்  மனதில்
கோபம் , வெறுப்பு
பொறாமை , பேராசை
வஞ்சகம் , ஏமாற்றுதல்
புறம் பேசுதல்
இவை  ஏதும்  இராது ........
குழந்தை  போல்  இருங்கள்
அன்பு  காட்டுவதில் ..........
அனைவரும்  ஏங்குவது
அன்பிற்கு  மட்டும் தான் ...........

மனிதர்களை  நேசியுங்கள்
மன்னிக்க  கற்று  கொள்ளுங்கள்
மனம்  விட்டு  பாராட்டுங்கள்
வாழ்க்கை  அழகாய்  மாறும்.........
வரமெனும்  வாழ்க்கையில்
சொர்க்கத்தின்  வாசல்கள்
திறக்கப்படும் .நிச்சயமாய் ........

ஏப்ரல் 06, 2020

யுத்தம் 2020



சுதந்திரமாய்  இயங்கிய
உலகத்தின்  எல்லைகள்
மூடப்பட்டு  விட்டன .........

எங்கு  பார்த்தாலும்
எச்சரிக்கை .......
எதிர்பார்க்காத  வாழ்க்கை  இது .........

மனிதனை  மனிதன்  பார்த்து
பயந்து  விலகுகின்றான் .......
தனிமைப்படுத்தப்படும்  நாடுகள்
தனிமைப்படுத்தப்படும் வீடுகள் ........
எதுவரை  நீளுமோ
இந்த  யுத்தம் .........
இரத்தம்  சிந்தவில்லை
கண்ணீர்  சிந்துகின்றோம் ...........

ஆயுதங்கள்  தாக்காத
அறிகுறிகள் தென்படாத
அமைதியான  யுத்தம்  இது .........

கடவுள்  கூட
தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்
ஆலயங்களில் ........
நடமாடும்  கடவுளாய்
பொதுச்சேவை  புரிவோர்கள் ...........

விழிப்புணர்வோடு
விலகி  நின்று
தடுத்து  நிறுத்துவோம்
கொரோனா  யுத்தத்தை ...........


மார்ச் 23, 2020

கொரோனா

                                               
இரண்டாயிரத்து  இருபதை
இருண்ட  உலகத்திற்கு
இழுத்துச்  செல்லும்
இரக்கமற்ற  கொடிய  நோய் .......

சீனாவில்  தொடங்கிய
முதற்கட்டப்  பயணம்
முடிவில்லாமல்
அச்சுறுத்துகிறது  அகிலத்தையே ..........

உலகப்  பொருளாதாரத்தை
உருக்குலைத்து
நினைத்துப்  பார்க்காத  உலகத்தை
உள்ளத்தில்  வலியோடு
உற்றுநோக்கச்  செய்யும்
கொடிய  நோய் .......

அனைத்துப்  பிரச்சனைகளையும்
மறக்கச்  செய்கின்றது .........
 கொரோனா  அச்சுறுத்துதல் ...........

வழிகள்  தெரியாததால்
விழிகள்  தேடுகின்றன
பல  வதந்திகளை ........

ஏற்றத தாழ்வு
பார்க்காமல்  பரவுவதால்  தான்
பதறுகின்றனர்  பணக்காரர்கள் ........

பரவாமல்  தடுக்க
பள்ளி , கல்லூரிகளுக்கு
விடுமுறை  அறிவிப்பு ..........
பயணங்கள்  இல்லாமல்
வீட்டிற்குள்  முடங்கச்  செய்யும்
மகிழ்ச்சி  இல்லாத
விடுமுறை  நாட்கள்
மாணவர்களுக்கு ..........

ஒரு  குடும்பத்தை  மட்டுமே
பாதிக்கும்
அம்மைத்  தொற்றின்  பயம் ......
ஆனால்
ஒட்டுமொத்த  உலகத்தையே
பாதிக்கின்றது
கோவிட  90  வைரஸ்  தொற்றின்  பயம் ........

ஓரிடத்தை  மட்டும்  பாதிக்கும்
இயற்கைப்  பேரிடர்  அல்ல ........
உலகப் பேரிடர்..........
தனிமைப் படுத்தி  விரட்டுவோம் ........
உயிரைப்  பணயம்  வைத்து
நம்  உயிர்  காக்கப்  போராடும்
பொதுச் சேவை  புரிவோரைப்
போற்றுவோம் .........

தன்  மாநிலம்
தன்  நாட்டை  விட்டுச்  சென்றவர்களுக்கு
அனுமதி  மறுப்பு
உள்ளே வர .....
அஞ்சுகின்றோம்  அவர்களைப்  பார்த்து ..........

சுத்தம் , சுகாதாரம்  காக்கும்
பெரிய  நாடுகளுக்கே
ஒரு சவால்  என்றால்
நமக்கோ  பெரும்  போராட்டம்  தான் .......
விழித்துக்  கொள்வோம் ........

பெரிய  வலியல்ல
மாத்ச  சம்பளம்  வாங்குபவர்களுக்கு ..........
ஆனால்
நோய்  வந்து  சாகும்  முன்னே
பசியினால்  உயிர்  போகுமோ
என  அஞ்சும்
தினக்கூலி  பெறும்
பாமர  மக்களுக்கு
விடை தான்  என்னவோ ...........

மூடப்படும்  ஆலயங்கள்
இறைவனை  உனக்குள்
தேடச்  சொல்கின்றது .......
மனித நேயத்தோடு
உதவுவோம்  பிறர்க்கு .........

தொழில்நுட்பம்
இணைத்த  உலகத்தை
கொரோனா
துண்டாக்குகிறது
தனிமைப்படுத்தி ...........

தொழில் நுட்பத்தில்
முன்னோக்கிச்  சென்றாலும் ........
பின்னோக்கிச்  செல்கின்றோம்
நம்  ஆரோக்கியத்தில் .........

உணவெனும்  மருந்து
உற்சாகம்  தந்தது
நம்  முன்னோர்களுக்கு .......
மருந்தெனும்  உணவு
சோர்வைத்  தருகின்றது
நமக்கும்
நம்  சந்ததிகளுக்கும் .........


மீட்டெடுப்போம் 
நம்  முன்னோர்கள்  காட்டிய
உணவு முறைகளை .........
வாழ்வியல்  முறைகளை .........
விரட்டி  அடிப்போம்
உயிர்  பறிக்கும்
தொற்று  நோய்களை ..........

 



அக்டோபர் 28, 2017

நிழல் தராத மரங்கள்

நேற்றுவரை
உன்னைத்  தாங்கிய  கைகள்  கூட
இன்று  உன்னை 
காயப்படுத்தலாம் ...........
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உன்  தோட்டத்தில்
இன்பமெனும்  பூ  பூக்கச்  செய்த
உறவுகள்  கூட
இன்று
இன்பத்தை  மட்டும்
அவர்கள்  பறித்துக்  கொண்டு
துன்பத்தை  உனக்கு  பரிசாக
கொடுத்திருக்கலாம் ................
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உன்  நலத்தை  மட்டும்
விரும்பிய 
இதயங்கள்  கூட
இன்று  அவர்களது   சுயநலத் தீயினால்
உன்னைச்  சுட்டு  எரித்திருக்கலாம் ................
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
சுகம்  தந்த  உறவுகள்   கூட
இன்று  சோகத்தை   மட்டுமே
தந்திருக்கலாம் ............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
முகமூடி  மாட்டிக்  கொண்டு
உன்னை  சிரிக்க  வைத்த  உறவுகள்  கூட
இன்று  முகத்திரைகள்  கிழித்து
அவர்களது  உண்மையான  முகங்கள்   காட்டி
உன்னை  அழ  வைத்திருக்கலாம் ..............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உறவுகள்  மீது
நீ  வைத்திருந்த  நம்பிக்கை
இன்று  இல்லாமல்  கூட
போயிருக்கலாம் ...............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
நீ   உலகமென   நினைத்த  உறவுகள்
இன்று  உன்னை
நினைக்கக்  கூட  மறந்திருக்கலாம் .............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

உன்னை  அழ  வைத்து
சிரிக்கும்  உறவுகளுக்காக
நீ  கண்ணீர்  மட்டும்  சிந்தாதே.............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

அன்பெனும்  நிழல்  தராத  மரங்கள்
இருந்தும்   பயனில்லை ...............
ஆனால்   வெட்டி  மட்டும்
எரிந்து  விடாதே ............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நவம்பர் 27, 2015

மழைத்துளி


 உன்  காதலியான
என்னை
முதலில்  முத்தமிட்டு ..........
பின்
நிலமென்னும்
உன்  தாயின்  மடியில்
தலை  சாய்த்துக்  கொள் ............

நவம்பர் 21, 2014

உறவுகள்

கோடி   கோடியாய்   
மக்கள் இருந்தாலும்
நாம்  அறிமுகமாகிக்  கொள்வது
சிலரோடு   தான் .............

நிச்சயிக்கப்பட்ட    இரத்த  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   சொந்த  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   திருமண  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   கருவறை பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட    நண்பர்கள்

மாற்ற   முடியாத
மறக்க   முடியாத
உறவுகளை
மதிக்கவும்
மன்னிக்கவும்
கற்றுக்  கொண்டால்
அந்த   வீடோ
ஒரு   கோயில்   தான் ...................

நவம்பர் 20, 2014

வெள்ளைக் காகிதம்

உன்   மனமென்னும்
டைரியில்
என்   நினைவென்னும்
பக்கத்தை   மட்டும்
அப்படியே
ஏதும்   எழுதாமல்
விட்டு   விடு .........
வண்ணக்   கனவுகளால்
மட்டும்
வண்ணம்   தீட்டி   விடாதே ...........

என் சுவாசமே .....

என்  மூச்சுக்  காற்றில்
உன்  உயிர்
துடித்தது
என்  கருவறையில்
அன்று ......

உன்  மூச்சுக்  காற்றில்  தான்
என்  உயிரே 
துடிக்கின்றது
இன்று .......

ஜனவரி 28, 2014

தவம்

தவம்   கிடக்கின்றேன்
தாய்மைக்காக ...............

எனக்குள்  கருவாய்
எனக்குள்  உயிராய்
எனக்குள்
எட்டி  உதைக்கப்  போகும்
உன்   பிஞ்சுப்  பாதம்
இப்  பூமியில்
கால்படும்   நாளை  எண்ணி
காத்திருக்கின்றேன் ................

என்   மூச்சுக் காற்றை
நீ   சுவாசிக்கப் போகும் 
நாளுக்காக
காத்திருக்கின்றேன் ..............

நொடிகளாய்
நிமிடங்களாய்
மணித்  துளிகளாய்
நாட்களாய்
மாதங்களாய்
வருடங்கள்   மட்டும்
கடந்து   செல்கின்றது ................
தினம்   அதே   பயணம்
தினம்   அதே  தேடல்
எனக்குள் .................

என்   தேடல்   நீ
விடியலாய்
என்   வாசலுக்கு
வந்து   விடு ..............
உன்னைச்   சுற்றி
என்   உலகம்   சுழல
தவம்   கிடக்கின்றேன் ...............

எங்கள்   வேண்டுதல்களை
விண்ணப்பங்களாய்
எல்லா   மத   கடவுள்களுக்கும்
விண்ணப்பித்திருக்கின்றோம் ..............
எங்கள்   விண்ணப்பங்கள்
ஏற்றுக்   கொள்ளப்படும்
நாளுக்காக
காத்திருக்கின்றோம் .......................

ஜனவரி 22, 2014

சோகம்

சிலருக்கு   சோகம்
ஊற்று  நீர்   போல ............
அவ்வப்போது   மனமென்னும்
மணல்   மேட்டில்
ஊறிக்   கொண்டேயிருக்கும் .............
ஊற்று  நீர்   போல்   சோகம்  வேண்டாம் ............
ஊற்று  நீர்   போல்   உற்சாகம்   வேண்டும் .............

சிலருக்கு   சோகம்
ஆற்று   நீர்   போல ............
 மனதில்   ஓரிடத்தில்   நிற்காமல்
வாழ்க்கைப்    போகும்   வழியில்
விதி   போகும்   வழியில்
ஓடிக்   கொண்டேயிருக்கும் .............
ஆற்று   நீர்   போல்
 நிற்காமல்......
சோகத்தைக்   கூட
அடித்துச்   செல்ல   வேண்டும் ..............

 சிலருக்கு   சோகம்
கடல்    நீர்   போல ............
கண்ணீரில்   கரைந்து    கொண்டு
வற்றாத   சோகம்
தீராத   சோகம்   என்று
கடல்   போன்ற    வாழ்க்கையை    பார்த்தே
தினம்   பயந்து   ஓட  வேண்டியுள்ளது .................
சோகக்   கடலுக்குள்
மூழ்கி   விட   வேண்டாம் .............
அதிலும்   மூழ்கி
முத்தெடுக்க   வழி   தேடுங்கள் ...............

இறுதியில்   நம்   உடல்
அஸ்தியாய்
கரைவது   கடலில்   தான்
என்றாலும்
ஆற்று   நீர்   போல்   ஓடி
வாழ்க்கையின்   அழகான
ஒவ்வொரு  நிமிடங்களிலும்
அங்கங்கே   அருவியாய்
துள்ளிக்  குதித்தும் ..........
அங்கங்கே   மேடு  ,  பள்ளம்
தாண்டியும் ............
அங்கங்கே   இளைப்பாறியும் ............
அங்கங்கே   சோகங்களை
தொலைத்து   விட்டும் ...............
வழி   தெரியும்   பாதையில்
பயணம்   செய்தால் ,
இறுதியில்
கடலில்   கலக்கும்   வரை
கலங்கத்   தேவையில்லை ....................

நவம்பர் 07, 2013

நிஜம்


இன்றைய    நிகழ்வுகள்
நாளைய    நினைவுகள் ............
இன்றைய    நிஜங்களை
புகைபடங்களாக்கி
நாளைய   நினைவுகளுக்காக
சேர்த்து   வைக்கின்றோம் ............
நினைத்துப்   பார்த்தால்
நம்  வாழ்க்கையே
ஒரு  நாள்
வெறும்   புகைப்படங்களாய்
வெறும்   நினைவுகளாய்
மட்டுமே
நம்மோடு   நடைபோடும்
முதுமைப்    பருவத்தில் ..........

இளைமையில்
வெறும்   நினைவுகள்   மட்டும்
வாழ்க்கையல்ல ........
அன்பு ,  காதல்
நட்பு ,  உறவு
சோகம் ,   உற்சாகம்
வெற்றி ,  தோல்வி
சோர்வு ,  வலிமை
நம்பிக்கை
அயராத   உழைப்பு
இவை   எல்லாம்   தான்
வாழ்க்கை ..........

ஆனால்  தள்ளாடும்   முதுமையிலோ
வெறும்   சோகம்
வெறும்   சோர்வு
வெறும்   நினைவுகள்   மட்டும்   தான்
வாழ்கையாய்   தோன்றும் ..............

இளைமையில்
அன்பு,   உற்சாகம் ,  சுறுசுறுப்பு
 வலிமை ,  நம்பிக்கை
அயராத   உழைப்பு
விட்டுக்  கொடுத்தல்
இவை   மட்டும்   இருந்தால்
முதுமை   கூட
இனிமையாய்   நிச்சயம்   அமையும் .......



பிப்ரவரி 14, 2012

தூக்கம்


தன்னிலை   மறந்த
உயிர்த்    துடிப்போடு
கூடிய
மரணத்திற்கான
ஓர்   ஒத்திகை............

பிப்ரவரி 13, 2012

மார்ச் 11, 2011

ஆசை


யாருக்கும்  தெரியாமல்
உன்  காதலியாய்
 கைகோர்த்து
ஊர் சுற்ற
ஆசையில்லை  எனக்கு ............
ஊருக்கும் , உலகுக்கும்
தெரிந்த  படி
உன்  மனைவியாய்
கரம் பிடித்து
ஊர்வலம்   செல்லத்  தான்
ஆசை  எனக்கு ...............

யாருக்கும்  தெரியாமல்
தொலைபேசியில்
மணிக்கணக்காய்  பேச
ஆசையில்லை  எனக்கு ..............
மனைவியாய்
உன்னருகில்   அமர்ந்து
முகம்  பார்த்து
பேசத்  தான்
ஆசை  எனக்கு ................

யாருக்கும்  தெரியாமல்
உன்  புகைப்படம்   பார்த்து
பொழுதுகள்   விடிய
ஆசையில்லை  எனக்கு ..............
தினம்  உன்  முகம்  பார்த்து
பொழுதுகள்
விடியத்  தான்
ஆசை  எனக்கு ................

மார்ச் 08, 2011

புன்னகைப் பூவே

அன்பே
நீ   புன்னகைப்பதால்
மலர்வது
உன்   முகம்   என்றாலும்
நானும்   புதிதாய்   மலர்கின்றேன்
தினமும்
உன்னைப்   பார்த்து   ரசிப்பதால் .............

என்னைச்    சித்திரவதை   செய்யும்
உன்   சிரிப்பை   மட்டும்
என்றுமே   நிறுத்தி   விடாதே
ஏனென்றால்
உன்   கண்ணீர்த்   துளி
என்னை   எரித்து   விடும்
நிச்சயமாக ................