ஜூன் 24, 2022

ஹைக்கூ கவிதைகள்

விரிந்த உலகத்தை கையில் தேடி தேடியே
வீடெனும் உலகத்திற்குள் கை கோர்க்க விடுவதில்லை
கைபேசி .........

ஒருவர் தூங்க
பலரை தட்டி எழுப்பும் ஒலி 
குறட்டை .......

உயிர்த் துடிப்போடு 
கண்களை மூடி 
இருண்ட உலகத்திற்குள் 
தினம் அழைத்துச் செல்கின்றது 
தூக்கம் .......


ஜூன் 19, 2022

என் அன்பு அப்பாவிற்கு ......

என் அன்பு அப்பாவிற்கு ......

எங்களை கரைசேர்க்க
உங்கள் வேதனைகளை
உள்ளுக்குள் மறைத்து
கலங்கி நின்ற நாட்கள்
தூக்கம் தொலைத்த நாட்களை
என்றுமே மறக்க முடியாது .......

எங்கள் வாழ்க்கை 
அழகாய் மலர
ஆயிரம் முட்கள் தந்த வலிகளை கூட
ஆனந்தமாய் ஏற்று
அன்போடு வழித்துணையாய் வந்தீர்கள் ......

நீங்கள் தந்த
அன்பு கடனை அடைக்க
ஆயிரம் ஜென்மங்கள்
போதாது எனக்கு .......

ஜூன் 09, 2022

நம்பிக்கை துரோகம்

அன்பை புதைத்து
ஆத்திரத்தை தூண்டி விடும் ....
அழகான உறவுகளை 
அடியோடு பிரித்து விடும் ....

ஆயிரம் பொய் திரைகள் போர்த்தி 
உண்மையெனும் சூரியனை 
மறைக்க நினைத்தாலும் 
மறைக்க முடியாது ....
சுட்டெரித்து விடும் 
நிச்சயம் ஒரு நாள் ....

உடைந்த நம்பிக்கையை 
ஒட்ட வைத்தாலும் 
மறக்க முடியாது 
மனம் உடைந்த நாட்களை .....
ஆற்ற முடியாது 
அது தந்த காயங்களை .......

நல்லவர் போல் எள்ளி நகையாடி 
முதுகில் குத்தும் 
நன்றி இல்லா 
நயவஞ்சக மனிதர்களிடம் 
விலகியே இருங்கள் ......

துரோகம் என்ற கல்லினால் 
நம்பிக்கை எனும் வாழ்க்கை கண்ணாடியை 
உடைத்து விளையாடும் 
உணர்ச்சியற்ற மனிதர்களிடம் 
எச்சரிக்கையாய் இருங்கள் ........

துணிச்சலோடு 
தூக்கி எறியுங்கள் 
துரோகிகளை ......

தன்னம்பிக்கையோடு 
எதிர் கொள்ளுங்கள் 
தாங்க முடியா தருணங்களையும் ......



ஜூன் 01, 2022

ஹைக்கூ கவிதைகள்

மனம் எனும் காட்டிற்குள்
அலைந்து திரியும்
ஆயிரம் உணர்வுகளெனும் விலங்குகளை
அடக்க பிறந்தவன்
மனிதன் ........

உருவம் தந்த உடலை மட்டும் புதைத்து
புதைக்க முடியா நினைவுகளோடு
வாழச் செய்கின்றது
மரணம் ........

எனக்குள் வலிக்கும் என்று
எழுத மறுக்கின்றது உன் பெயரை
என் பேனா .......

மே 21, 2022

அன்பு மகனுக்கு ஒரு கடிதம் .....



அன்பு மகனுக்கு.......

உன் முத்தத்தின் ஈரத்தை
துடைக்கத் தெரியாது
என் கைகளுக்கு ........
உன் கண்ணீரின் ஈரத்தை
துடைக்கத் தெரிந்த கைகளால்
விரல் நுனியின் பிடியில்
மலரும் ஓர் அன்பு மடல் .......

அன்பெனும் வீட்டிற்குள் 
அடைபட்டு கிடந்தாய் .....
பறந்து தனியே 
பாதை தேடி 
பயணப் பட போகின்றாய் .......
வழியெங்கும் 
வலிமைகளும் 
வலிகளும் 
வந்து சேரும் 
அனுபவங்களாய் .....
எதுவாயினும் 
ஏற்றுக் கொள்ள பழகிக்  கொள் .....

தராசுக் கற்கள் அல்ல 
உன் வாழ்க்கை 
அடுத்தவர் எடை தூக்கிப் பார்க்க ......
வைரக் கற்கள் 
மெருகேற்றிக் கொள் 
தன்னம்பிக்கையோடு ......

அடுத்தவர் பற்றி குறை கூறியே 
காலம் கடத்தும் மனிதர்களை 
கடந்து செல்ல பழகிக் கொள் .......

வலி தரும் விமர்சன வாளால் 
வெட்டி சாய்க்கும் மனிதர்களிடம் 
எட்டி நிற்க பழகிக் கொள் ......

அடுத்தவர் பார்வைக்காக , பகட்டுக்காக 
அலங்கரிக்காதே உன் வாழ்க்கையை .......
தேவைகளை குறைத்துக் கொண்டு 
வாழப்  பழகிக் கொள் ........
தேவதைகளும் வந்து வாழ்த்து சொல்வர் ......

பதக்கங்கள் , பரிசுகள் மட்டும் 
அலங்கரிக்கப் போவதில்லை 
உன் வாழ்க்கையை ....
நல்லெண்ணங்களும் , தன்னம்பிக்கை மட்டுமே 
அலங்கரிக்கும் 
உன் வாழ்க்கையை ......

யாருக்கும் நிரந்தரமல்ல 
வெற்றியும் , தோல்வியும் .......
தோல்வியும் 
தோற்றுப் போகும் 
உன்னையே நீ 
தேற்றிக் கொண்டு 
போராடும் போது .......

தீர்க்க முடியா பிரச்சனையென்று 
எதுவும் இல்லை என்பதை 
தீர்க்கமாய் நம்பு .....
தீர்வு கிடைக்கும் நிச்சயமாய் ........

இன்பமோ , துன்பமோ 
ஏற்றுக் கொள்ள பழகிக் கொள் ......
வாழ்க்கை வாழ்வதற்க்கே 
இதுவும் கடந்து போகும் 
என்ற நம்பிக்கையை மட்டும் 
ஒருபோதும் 
இழந்து விடாதே .........
























ஏப்ரல் 02, 2022

விழியென்னும் புதைகுழி

உதடுகள் 
பேச  தயங்கும் 
வார்த்தைகளை 
பேசுகின்றது 
நம்  விழிகள் .......

என்னை  இழுக்கின்றது 
உன்  விழியென்னும்  புதைகுழி .......
அதனால்  தான் 
மௌனமாய் 
தலை குனிந்து செல்கின்றேன் 
உன்னை கடக்கும்  போது  மட்டும் ..........

மார்ச் 02, 2022

என் உயிரே ....


கவிதை வரிகளாய்
உன் வார்த்தைகள் ......
அர்த்தம் தேடியே தினம்
அலைகின்றேன் நான் .......

புதிர் போடும்
உன் புன்னகைக்கு
விடை தேடியே
விடியலைக்  கூட  விரும்பாமல் 
விழுந்து  கிடக்கின்றேன்  நான் .......

விருப்பம்  அறிந்தும் 
விலகி செல்கின்றாய் .....
மௌனமாய் 
எட்டாத தூரத்தில் ......
விடை கிடைக்கும் நாளில் தான் 
என் வானில் விடியல் ......

காத்திருக்கின்றேன் 
தூணென  உனைத் தாங்க .....
தூக்கி  எறியாதே 
காகிதமாய்  எனை .......





பிப்ரவரி 01, 2022

ஹைக்கூ கவிதைகள்

விரல்  பட்டால்  வாடி விடுவேன்

எட்டி  நின்றே  எனை  ரசித்திடு 

ரோஜா ......


ஓடும்  வரை  மதிப்புண்டு 

ஓய்ந்து  நின்றால்  மதிப்பில்லை 

கடிகாரத்திற்கும் , மனிதனுக்கும் .......


அழிக்கின்றாய்  காடுகளை 

தகர்க்கின்றாய்  மலைகளை 

உறிஞ்சுகின்றாய்  நதிகளை 

எரித்திடுவேன்  என்பதால் 

எனை  மட்டும்  தொட  அஞ்சுகின்றாய் 

சூரியன் ........

ஜனவரி 06, 2022

ஹைக்கூ கவிதைகள



நீரும் , காற்றும் இருந்திருந்தால்

என்றோ விற்கப் பட்டிருப்பேன்

வானம் ........




வெட்டப்பட்ட கைகள்

வலியில் துடிக்கின்றன

வாயில்லா மரங்கள் ...........




விளம்பரம் , விமர்சனம் அன்றி

தன் வேலையைச் செய்கின்றது

இயற்கை ............

அக்டோபர் 11, 2021

வாழ்க்கை பயணம்



இயற்கையோடு இணையும் போது
வாழ்வின் இனிமை புரிகின்றது ......
மனிதர்களோடு இணையும் போது
வாழ்வின் இன்னல்கள் புரிகின்றது .....

இனிமையும் , இன்னலும்
இரண்டறக் கலந்ததே
இந்த அழகான
வாழ்க்கை பயணம் ........

ஜூலை 23, 2021

அன்பு


உச்சரிக்கும்  போதே 
உணரப்படும்  வார்த்தை  அது .......
வெறுப்பை  வெல்லக்கூடிய 
ஆயுதம்  அது .......

குற்றம் , குறை  மட்டுமே  கண்டால் 
மெல்ல , மெல்ல 
விரிசல்  விடத்  தொடங்கும் 
அன்பெனும்  பாலத்தில் .........

நினைவுகளை 
அழகாய்  அலங்கரிக்கும் 
அழியாத  அன்பினை 
அள்ளிக்  கொடுத்தால்  என்ன !......

ஜூலை 13, 2021

முதுமையை போற்று



இனிமை  தரும்  இளமையில் 
வெறுமையை  உணரும்  முதியவர்க்காக 
நேரம்  ஒதுக்குங்கள் ........ 

தோளில்  நம்மைத்  தூக்கித் திரிந்தவர்கள் 
தளர்ந்து  போகும்  போது 
தாங்கிக்  கொள்  உனது  தோள்களில் .........

நிற்க  நேரமில்லாமல் 
நமக்காக ஓடி உழைத்தவர்கள் 
போற்றப்  பட  வேண்டும்  முதுமையிலும் .......
அவர்கள்  தந்த 
அன்பு,, அரவணைப்பை 
இரட்டிப்பாக  திருப்பித்  தர வேண்டும் 
அவர்களின்  முதுமை காலத்தில் ........

நம்  தேவைகளை மட்டுமே 
தீர்க்கத்  தெரிந்தவர்களுக்கு 
அவர்கள்  தேவைகளை  கேட்கவே தெரியாது ......
நமக்கு  வெளிச்சம்  கொடுத்த 
அவர்களது  உலகம் 
என்றுமே  இருண்டு  விடக்  கூடாது .......

வேதனைகள்  இல்லாமல் 
நம்மை  வளர்த்தவர்களை 
வேதனைப் படுத்தி  விடாதீர்கள்  முதுமையில் .......
நமக்காக  தூக்கம்  தொலைத்தவர்கள் 
துயரப் படக்  கூடாது  முதுமையில் ........

முதியோரை  மதிக்கத்  தெரியாத  மனிதர்கள் 
மண்ணில்  பிறந்தும்  பயனில்லை ........
போற்றுவோம்  முதுமையை ........
அகற்றுவோம் முதியோர் இல்லங்களை .........
 

ஜூலை 12, 2021

விதிகள்


சிரித்தாலும் , அழுதாலும் 
சிந்தும்  கண்ணீர்  ஒன்று  தான் ........
சுகமோ , சுமையோ 
தாங்கும்  தோள்கள்  ஒன்று  தான் ..........
வெற்றியோ , தோல்வியோ 
வாழ்க்கை  ஒன்று  தான் .........

திருப்பங்கள்  நிறைந்த 
வாழ்க்கைப்  பாதையில் 
எதையும்  எதிர்கொண்டு 
பயணிக்க  கற்றுக் கொள் ..........
ஏற்க  முடியாத 
வலிகள், ஏமாற்றங்கள் கூட 
கடந்து  போகக்  கூடும் .........

இருக்கும்  ஒரு  வாழ்க்கையை 
இறக்கும்  வரை 
ரசித்து  வாழக்  கற்றுக்கொள் .........
ரசிக்க  கூட  மறக்கலாம் 
ஆனால்  
வெறுத்து மட்டும் 
விடாதே .........

வீழ்ந்தாலும் 
வெல்வதற்கு  போராடு ........
விதியைக்  கூட 
மாற்றி  எழுதலாம் ...........


மரங்கள்


மண்ணில்  விழும்  விதைகள்  எல்லாம் 
செடியாய்  தளிர்ப்பதில்லை .........
தளிர்த்த  செடிகள்  எல்லாம் 
ஓங்கி  மரமாய் வளர்வதுமில்லை .........
வளர்ந்த  மரங்கள்  எல்லாம் 
பல்லாண்டுகள்  வாழ்வதும்  இல்லை..........

தினம் போராடி வளர்ந்த மரத்தினை
நொடிப் பொழுதினில்
வேரொடு வெட்டியெறிந்து
வீழச் செய்யும் மனிதர்களே
சற்று சிந்தியுங்கள் .........
வீழ்வது இன்று மரங்கள் என்றாலும்
நாளை வீழப்போவது மனிதர்களே.........

தாகம் தீர்க்க மழையையும்
உயிர் காக்க ஆக்ஸிஜனையும்
இலவசமாய் வழங்கி
உதவிக்கரம் நீட்டும்
மரங்களின் கைகளை இன்று வெட்டினால்
நாளை கையேந்த வேண்டியிருக்கும்
நீருக்காக .........
மூச்சுக் காற்றிற்காக .........

காத்திடுவோம்  காடுகளை .....
விட்டுச் செல்வோம்
பசுமை போர்த்திய பூமியாய் .....
நாளைய தலைமுறையும்
வாழ்வதற்காக............

சிகரெட்

 

கொஞ்சம்  கொஞ்சமாய் 
உன்னைக்  கொல்லும்  என்னை 
ஏன்  கைகளில்  வைத்து  கொண்டாடுகிறாய் .........
விற்பனைக்கு  இங்கு  தடை  இல்லை  என்பதாலோ ?......

உன்  உடம்பை  உருக்கும்  என்னை 
ஏன்  உருகி  உருகி  தேடுகிறாய் .........
உன் வலிகளுக்கு  மருந்தல்ல  நான் 
என்னை  தூக்கி  எறிந்து  விடு .........

கரம்  பிடித்தவளின்  கண்ணீர்  துடைக்க 
என்னை  கை விட்டு  விடு .........
உலகமென  உன்னைச்  சுற்றிச்  சுழலும் 
உறவுகளின்  வார்த்தைகளை  மட்டும் 
உதறிச்  செல்லாதே .........

மாற்றங்கள்  உனக்குள்  தளிர்விட்டால் 
மகிழ்ச்சி  பூக்கும் 
உன் வீட்டுத்  தோட்டத்தில்.........

ஜூலை 10, 2021

அடையாளங்கள்

மணமான பெண்களுக்கு
விரல்கள் அடைபடும் " மெட்டிக்குள் "
கழுத்து அடைபடும் " தாலிக் கயிற்றுக்குள் "
விடுபட விருப்பமில்லாத
ஏற்றுக் கொள்ளப்பட்ட
சமுதாயச் சடங்குகள் ..........
ஏன் இத்தனை அடையாளங்கள் , சடங்குகள்
பெண்களுக்கு மட்டும் ? .......


ஏப்ரல் 08, 2020

வாழ்க்கை ஒரு வரம்

எதிலும்  குறை காணும்  மனிதர்களுக்கு
என்றும்  நிறைவே  இல்லை ..........
குறைகளை  பட்டியலிட்டு
வீணடிக்காதே
மீட்க  முடியாத  மணித்துளிகளை ...........

குழந்தையின்  மனதில்
கோபம் , வெறுப்பு
பொறாமை , பேராசை
வஞ்சகம் , ஏமாற்றுதல்
புறம் பேசுதல்
இவை  ஏதும்  இராது ........
குழந்தை  போல்  இருங்கள்
அன்பு  காட்டுவதில் ..........
அனைவரும்  ஏங்குவது
அன்பிற்கு  மட்டும் தான் ...........

மனிதர்களை  நேசியுங்கள்
மன்னிக்க  கற்று  கொள்ளுங்கள்
மனம்  விட்டு  பாராட்டுங்கள்
வாழ்க்கை  அழகாய்  மாறும்.........
வரமெனும்  வாழ்க்கையில்
சொர்க்கத்தின்  வாசல்கள்
திறக்கப்படும் .நிச்சயமாய் ........

ஏப்ரல் 06, 2020

யுத்தம் 2020



சுதந்திரமாய்  இயங்கிய
உலகத்தின்  எல்லைகள்
மூடப்பட்டு  விட்டன .........

எங்கு  பார்த்தாலும்
எச்சரிக்கை .......
எதிர்பார்க்காத  வாழ்க்கை  இது .........

மனிதனை  மனிதன்  பார்த்து
பயந்து  விலகுகின்றான் .......
தனிமைப்படுத்தப்படும்  நாடுகள்
தனிமைப்படுத்தப்படும் வீடுகள் ........
எதுவரை  நீளுமோ
இந்த  யுத்தம் .........
இரத்தம்  சிந்தவில்லை
கண்ணீர்  சிந்துகின்றோம் ...........

ஆயுதங்கள்  தாக்காத
அறிகுறிகள் தென்படாத
அமைதியான  யுத்தம்  இது .........

கடவுள்  கூட
தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்
ஆலயங்களில் ........
நடமாடும்  கடவுளாய்
பொதுச்சேவை  புரிவோர்கள் ...........

விழிப்புணர்வோடு
விலகி  நின்று
தடுத்து  நிறுத்துவோம்
கொரோனா  யுத்தத்தை ...........


மார்ச் 23, 2020

கொரோனா

                                               
இரண்டாயிரத்து  இருபதை
இருண்ட  உலகத்திற்கு
இழுத்துச்  செல்லும்
இரக்கமற்ற  கொடிய  நோய் .......

சீனாவில்  தொடங்கிய
முதற்கட்டப்  பயணம்
முடிவில்லாமல்
அச்சுறுத்துகிறது  அகிலத்தையே ..........

உலகப்  பொருளாதாரத்தை
உருக்குலைத்து
நினைத்துப்  பார்க்காத  உலகத்தை
உள்ளத்தில்  வலியோடு
உற்றுநோக்கச்  செய்யும்
கொடிய  நோய் .......

அனைத்துப்  பிரச்சனைகளையும்
மறக்கச்  செய்கின்றது .........
 கொரோனா  அச்சுறுத்துதல் ...........

வழிகள்  தெரியாததால்
விழிகள்  தேடுகின்றன
பல  வதந்திகளை ........

ஏற்றத தாழ்வு
பார்க்காமல்  பரவுவதால்  தான்
பதறுகின்றனர்  பணக்காரர்கள் ........

பரவாமல்  தடுக்க
பள்ளி , கல்லூரிகளுக்கு
விடுமுறை  அறிவிப்பு ..........
பயணங்கள்  இல்லாமல்
வீட்டிற்குள்  முடங்கச்  செய்யும்
மகிழ்ச்சி  இல்லாத
விடுமுறை  நாட்கள்
மாணவர்களுக்கு ..........

ஒரு  குடும்பத்தை  மட்டுமே
பாதிக்கும்
அம்மைத்  தொற்றின்  பயம் ......
ஆனால்
ஒட்டுமொத்த  உலகத்தையே
பாதிக்கின்றது
கோவிட  90  வைரஸ்  தொற்றின்  பயம் ........

ஓரிடத்தை  மட்டும்  பாதிக்கும்
இயற்கைப்  பேரிடர்  அல்ல ........
உலகப் பேரிடர்..........
தனிமைப் படுத்தி  விரட்டுவோம் ........
உயிரைப்  பணயம்  வைத்து
நம்  உயிர்  காக்கப்  போராடும்
பொதுச் சேவை  புரிவோரைப்
போற்றுவோம் .........

தன்  மாநிலம்
தன்  நாட்டை  விட்டுச்  சென்றவர்களுக்கு
அனுமதி  மறுப்பு
உள்ளே வர .....
அஞ்சுகின்றோம்  அவர்களைப்  பார்த்து ..........

சுத்தம் , சுகாதாரம்  காக்கும்
பெரிய  நாடுகளுக்கே
ஒரு சவால்  என்றால்
நமக்கோ  பெரும்  போராட்டம்  தான் .......
விழித்துக்  கொள்வோம் ........

பெரிய  வலியல்ல
மாத்ச  சம்பளம்  வாங்குபவர்களுக்கு ..........
ஆனால்
நோய்  வந்து  சாகும்  முன்னே
பசியினால்  உயிர்  போகுமோ
என  அஞ்சும்
தினக்கூலி  பெறும்
பாமர  மக்களுக்கு
விடை தான்  என்னவோ ...........

மூடப்படும்  ஆலயங்கள்
இறைவனை  உனக்குள்
தேடச்  சொல்கின்றது .......
மனித நேயத்தோடு
உதவுவோம்  பிறர்க்கு .........

தொழில்நுட்பம்
இணைத்த  உலகத்தை
கொரோனா
துண்டாக்குகிறது
தனிமைப்படுத்தி ...........

தொழில் நுட்பத்தில்
முன்னோக்கிச்  சென்றாலும் ........
பின்னோக்கிச்  செல்கின்றோம்
நம்  ஆரோக்கியத்தில் .........

உணவெனும்  மருந்து
உற்சாகம்  தந்தது
நம்  முன்னோர்களுக்கு .......
மருந்தெனும்  உணவு
சோர்வைத்  தருகின்றது
நமக்கும்
நம்  சந்ததிகளுக்கும் .........


மீட்டெடுப்போம் 
நம்  முன்னோர்கள்  காட்டிய
உணவு முறைகளை .........
வாழ்வியல்  முறைகளை .........
விரட்டி  அடிப்போம்
உயிர்  பறிக்கும்
தொற்று  நோய்களை ..........

 



அக்டோபர் 28, 2017

நிழல் தராத மரங்கள்

நேற்றுவரை
உன்னைத்  தாங்கிய  கைகள்  கூட
இன்று  உன்னை 
காயப்படுத்தலாம் ...........
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உன்  தோட்டத்தில்
இன்பமெனும்  பூ  பூக்கச்  செய்த
உறவுகள்  கூட
இன்று
இன்பத்தை  மட்டும்
அவர்கள்  பறித்துக்  கொண்டு
துன்பத்தை  உனக்கு  பரிசாக
கொடுத்திருக்கலாம் ................
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உன்  நலத்தை  மட்டும்
விரும்பிய 
இதயங்கள்  கூட
இன்று  அவர்களது   சுயநலத் தீயினால்
உன்னைச்  சுட்டு  எரித்திருக்கலாம் ................
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
சுகம்  தந்த  உறவுகள்   கூட
இன்று  சோகத்தை   மட்டுமே
தந்திருக்கலாம் ............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
முகமூடி  மாட்டிக்  கொண்டு
உன்னை  சிரிக்க  வைத்த  உறவுகள்  கூட
இன்று  முகத்திரைகள்  கிழித்து
அவர்களது  உண்மையான  முகங்கள்   காட்டி
உன்னை  அழ  வைத்திருக்கலாம் ..............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உறவுகள்  மீது
நீ  வைத்திருந்த  நம்பிக்கை
இன்று  இல்லாமல்  கூட
போயிருக்கலாம் ...............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
நீ   உலகமென   நினைத்த  உறவுகள்
இன்று  உன்னை
நினைக்கக்  கூட  மறந்திருக்கலாம் .............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

உன்னை  அழ  வைத்து
சிரிக்கும்  உறவுகளுக்காக
நீ  கண்ணீர்  மட்டும்  சிந்தாதே.............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

அன்பெனும்  நிழல்  தராத  மரங்கள்
இருந்தும்   பயனில்லை ...............
ஆனால்   வெட்டி  மட்டும்
எரிந்து  விடாதே ............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............