அக்டோபர் 28, 2017

நிழல் தராத மரங்கள்

நேற்றுவரை
உன்னைத்  தாங்கிய  கைகள்  கூட
இன்று  உன்னை 
காயப்படுத்தலாம் ...........
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உன்  தோட்டத்தில்
இன்பமெனும்  பூ  பூக்கச்  செய்த
உறவுகள்  கூட
இன்று
இன்பத்தை  மட்டும்
அவர்கள்  பறித்துக்  கொண்டு
துன்பத்தை  உனக்கு  பரிசாக
கொடுத்திருக்கலாம் ................
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உன்  நலத்தை  மட்டும்
விரும்பிய 
இதயங்கள்  கூட
இன்று  அவர்களது   சுயநலத் தீயினால்
உன்னைச்  சுட்டு  எரித்திருக்கலாம் ................
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
சுகம்  தந்த  உறவுகள்   கூட
இன்று  சோகத்தை   மட்டுமே
தந்திருக்கலாம் ............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
முகமூடி  மாட்டிக்  கொண்டு
உன்னை  சிரிக்க  வைத்த  உறவுகள்  கூட
இன்று  முகத்திரைகள்  கிழித்து
அவர்களது  உண்மையான  முகங்கள்   காட்டி
உன்னை  அழ  வைத்திருக்கலாம் ..............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
உறவுகள்  மீது
நீ  வைத்திருந்த  நம்பிக்கை
இன்று  இல்லாமல்  கூட
போயிருக்கலாம் ...............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நேற்றுவரை
நீ   உலகமென   நினைத்த  உறவுகள்
இன்று  உன்னை
நினைக்கக்  கூட  மறந்திருக்கலாம் .............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

உன்னை  அழ  வைத்து
சிரிக்கும்  உறவுகளுக்காக
நீ  கண்ணீர்  மட்டும்  சிந்தாதே.............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

அன்பெனும்  நிழல்  தராத  மரங்கள்
இருந்தும்   பயனில்லை ...............
ஆனால்   வெட்டி  மட்டும்
எரிந்து  விடாதே ............
தாங்கிக்  கொள்ளப்  பழகிக் கொள் ...............

நவம்பர் 27, 2015

மழைத்துளி


 உன்  காதலியான
என்னை
முதலில்  முத்தமிட்டு ..........
பின்
நிலமென்னும்
உன்  தாயின்  மடியில்
தலை  சாய்த்துக்  கொள் ............

நவம்பர் 21, 2014

உறவுகள்

கோடி   கோடியாய்   
மக்கள் இருந்தாலும்
நாம்  அறிமுகமாகிக்  கொள்வது
சிலரோடு   தான் .............

நிச்சயிக்கப்பட்ட    இரத்த  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   சொந்த  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   திருமண  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   கருவறை பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட    நண்பர்கள்

மாற்ற   முடியாத
மறக்க   முடியாத
உறவுகளை
மதிக்கவும்
மன்னிக்கவும்
கற்றுக்  கொண்டால்
அந்த   வீடோ
ஒரு   கோயில்   தான் ...................

நவம்பர் 20, 2014

வெள்ளைக் காகிதம்

உன்   மனமென்னும்
டைரியில்
என்   நினைவென்னும்
பக்கத்தை   மட்டும்
அப்படியே
ஏதும்   எழுதாமல்
விட்டு   விடு .........
வண்ணக்   கனவுகளால்
மட்டும்
வண்ணம்   தீட்டி   விடாதே ...........

என் சுவாசமே .....

என்  மூச்சுக்  காற்றில்
உன்  உயிர்
துடித்தது
என்  கருவறையில்
அன்று ......

உன்  மூச்சுக்  காற்றில்  தான்
என்  உயிரே 
துடிக்கின்றது
இன்று .......

ஜனவரி 28, 2014

தவம்

தவம்   கிடக்கின்றேன்
தாய்மைக்காக ...............

எனக்குள்  கருவாய்
எனக்குள்  உயிராய்
எனக்குள்
எட்டி  உதைக்கப்  போகும்
உன்   பிஞ்சுப்  பாதம்
இப்  பூமியில்
கால்படும்   நாளை  எண்ணி
காத்திருக்கின்றேன் ................

என்   மூச்சுக் காற்றை
நீ   சுவாசிக்கப் போகும் 
நாளுக்காக
காத்திருக்கின்றேன் ..............

நொடிகளாய்
நிமிடங்களாய்
மணித்  துளிகளாய்
நாட்களாய்
மாதங்களாய்
வருடங்கள்   மட்டும்
கடந்து   செல்கின்றது ................
தினம்   அதே   பயணம்
தினம்   அதே  தேடல்
எனக்குள் .................

என்   தேடல்   நீ
விடியலாய்
என்   வாசலுக்கு
வந்து   விடு ..............
உன்னைச்   சுற்றி
என்   உலகம்   சுழல
தவம்   கிடக்கின்றேன் ...............

எங்கள்   வேண்டுதல்களை
விண்ணப்பங்களாய்
எல்லா   மத   கடவுள்களுக்கும்
விண்ணப்பித்திருக்கின்றோம் ..............
எங்கள்   விண்ணப்பங்கள்
ஏற்றுக்   கொள்ளப்படும்
நாளுக்காக
காத்திருக்கின்றோம் .......................

ஜனவரி 22, 2014

சோகம்

சிலருக்கு   சோகம்
ஊற்று  நீர்   போல ............
அவ்வப்போது   மனமென்னும்
மணல்   மேட்டில்
ஊறிக்   கொண்டேயிருக்கும் .............
ஊற்று  நீர்   போல்   சோகம்  வேண்டாம் ............
ஊற்று  நீர்   போல்   உற்சாகம்   வேண்டும் .............

சிலருக்கு   சோகம்
ஆற்று   நீர்   போல ............
 மனதில்   ஓரிடத்தில்   நிற்காமல்
வாழ்க்கைப்    போகும்   வழியில்
விதி   போகும்   வழியில்
ஓடிக்   கொண்டேயிருக்கும் .............
ஆற்று   நீர்   போல்
 நிற்காமல்......
சோகத்தைக்   கூட
அடித்துச்   செல்ல   வேண்டும் ..............

 சிலருக்கு   சோகம்
கடல்    நீர்   போல ............
கண்ணீரில்   கரைந்து    கொண்டு
வற்றாத   சோகம்
தீராத   சோகம்   என்று
கடல்   போன்ற    வாழ்க்கையை    பார்த்தே
தினம்   பயந்து   ஓட  வேண்டியுள்ளது .................
சோகக்   கடலுக்குள்
மூழ்கி   விட   வேண்டாம் .............
அதிலும்   மூழ்கி
முத்தெடுக்க   வழி   தேடுங்கள் ...............

இறுதியில்   நம்   உடல்
அஸ்தியாய்
கரைவது   கடலில்   தான்
என்றாலும்
ஆற்று   நீர்   போல்   ஓடி
வாழ்க்கையின்   அழகான
ஒவ்வொரு  நிமிடங்களிலும்
அங்கங்கே   அருவியாய்
துள்ளிக்  குதித்தும் ..........
அங்கங்கே   மேடு  ,  பள்ளம்
தாண்டியும் ............
அங்கங்கே   இளைப்பாறியும் ............
அங்கங்கே   சோகங்களை
தொலைத்து   விட்டும் ...............
வழி   தெரியும்   பாதையில்
பயணம்   செய்தால் ,
இறுதியில்
கடலில்   கலக்கும்   வரை
கலங்கத்   தேவையில்லை ....................

நவம்பர் 07, 2013

நிஜம்


இன்றைய    நிகழ்வுகள்
நாளைய    நினைவுகள் ............
இன்றைய    நிஜங்களை
புகைபடங்களாக்கி
நாளைய   நினைவுகளுக்காக
சேர்த்து   வைக்கின்றோம் ............
நினைத்துப்   பார்த்தால்
நம்  வாழ்க்கையே
ஒரு  நாள்
வெறும்   புகைப்படங்களாய்
வெறும்   நினைவுகளாய்
மட்டுமே
நம்மோடு   நடைபோடும்
முதுமைப்    பருவத்தில் ..........

இளைமையில்
வெறும்   நினைவுகள்   மட்டும்
வாழ்க்கையல்ல ........
அன்பு ,  காதல்
நட்பு ,  உறவு
சோகம் ,   உற்சாகம்
வெற்றி ,  தோல்வி
சோர்வு ,  வலிமை
நம்பிக்கை
அயராத   உழைப்பு
இவை   எல்லாம்   தான்
வாழ்க்கை ..........

ஆனால்  தள்ளாடும்   முதுமையிலோ
வெறும்   சோகம்
வெறும்   சோர்வு
வெறும்   நினைவுகள்   மட்டும்   தான்
வாழ்கையாய்   தோன்றும் ..............

இளைமையில்
அன்பு,   உற்சாகம் ,  சுறுசுறுப்பு
 வலிமை ,  நம்பிக்கை
அயராத   உழைப்பு
விட்டுக்  கொடுத்தல்
இவை   மட்டும்   இருந்தால்
முதுமை   கூட
இனிமையாய்   நிச்சயம்   அமையும் .......



பிப்ரவரி 14, 2012

தூக்கம்


தன்னிலை   மறந்த
உயிர்த்    துடிப்போடு
கூடிய
மரணத்திற்கான
ஓர்   ஒத்திகை............

பிப்ரவரி 13, 2012

மார்ச் 11, 2011

ஆசை


யாருக்கும்  தெரியாமல்
உன்  காதலியாய்
 கைகோர்த்து
ஊர் சுற்ற
ஆசையில்லை  எனக்கு ............
ஊருக்கும் , உலகுக்கும்
தெரிந்த  படி
உன்  மனைவியாய்
கரம் பிடித்து
ஊர்வலம்   செல்லத்  தான்
ஆசை  எனக்கு ...............

யாருக்கும்  தெரியாமல்
தொலைபேசியில்
மணிக்கணக்காய்  பேச
ஆசையில்லை  எனக்கு ..............
மனைவியாய்
உன்னருகில்   அமர்ந்து
முகம்  பார்த்து
பேசத்  தான்
ஆசை  எனக்கு ................

யாருக்கும்  தெரியாமல்
உன்  புகைப்படம்   பார்த்து
பொழுதுகள்   விடிய
ஆசையில்லை  எனக்கு ..............
தினம்  உன்  முகம்  பார்த்து
பொழுதுகள்
விடியத்  தான்
ஆசை  எனக்கு ................

மார்ச் 08, 2011

புன்னகைப் பூவே

அன்பே
நீ   புன்னகைப்பதால்
மலர்வது
உன்   முகம்   என்றாலும்
நானும்   புதிதாய்   மலர்கின்றேன்
தினமும்
உன்னைப்   பார்த்து   ரசிப்பதால் .............

என்னைச்    சித்திரவதை   செய்யும்
உன்   சிரிப்பை   மட்டும்
என்றுமே   நிறுத்தி   விடாதே
ஏனென்றால்
உன்   கண்ணீர்த்   துளி
என்னை   எரித்து   விடும்
நிச்சயமாக ................

அக்டோபர் 25, 2010

துடிக்கின்ற மனசு


தண்ணீரை   விட்டு
வெளியே   வந்து
தரையில்   துடிக்கும்
மீனென   துடிக்கின்றேன் .............
நீ   அருகில்   இருந்தும்
சண்டை   போட்டு
நாம்   பேசாமல்
நாம்   பார்க்காமல்
விலகி   இருக்கும்
அந்த   சில   மணித்   துளிகளில் .............

ஜூன் 30, 2010

பிறந்த நாள்


இனி   நான்
மறக்க   வேண்டிய   நாள் .
உனக்காக
நான்   பிறந்த
இந்   நாளை
ஒவ்வொரு   வருடமும்
நீ   மறந்து   விடுகிறாயே ............
அதனால்   தான்
நானும்   இனி
மறக்கப்   போகின்றேன் ..............

மே 27, 2010

தொட்டில் உறவு


"அம்மா "  என்று   அழைத்து   நான்
அணைத்துக்   கொள்ளும்   போதும்
"அம்மா  " என்று   என்   மகன்
என்னை   அழைத்து
அணைத்துக்   கொள்ளும்   போதும்
உள்ளத்தில்   எழும்
சந்தோசத்திற்கு   அளவே   இல்லை ................

இருபத்தெழு   வருடம்
உங்கள்   அன்பெனும்   வலைக்குள்
என்னை   பாதுகாப்பாய்   வைத்திருந்தீர்கள்.
என்னை   பாதுகாக்கும்   பொறுப்பை
என்   கணவருக்கு   கொடுத்த   பின்பு
என்னை   விட்டு   நீங்கள்
அதிகமாய்   விலகி   இருக்கிறீர்கள்.
நினைத்தவுடன்   வந்து   நிற்கும்   தூரத்தில்
நான்   இப்போது   இல்லை
அதனால்   தானோ   இந்த   பிரிவு .....................

திருமணம்   ஆன   உடனே
பெண்களுக்குப்   பிறந்த   வீடு
இரண்டாம்   பட்சமாக
ஆகி   விடுகின்றது ........
இதை   நினைக்கும்   போது
வேதனையாய்   இருந்தாலும்
இது   தான்   பெரும்பாலான
பெண்களுக்கு   விதிக்கப்பட்ட   விதி
என்று   எண்ணி   தான்
மனதைத்   தேற்ற   வேண்டியிருக்கிறது ......................

ஒவ்வொரு   பெண்ணும்
தன்   வீட்டிற்கு
வர   இருக்கும்   மருமகள்
இத்தனை   வருடம்   தன்னை
அன்பாய்   வளர்த்த
தாய் ,  தந்தையை
உடன்   பிறந்த   உறவுகளை
தான்   வளர்ந்த   வீடு
தான்   வளர்ந்த   ஊர்
இவை   எல்லாவ ற்றையும்
விட்டு   விட்டு   தானே
தன்   வீட்டிற்கு   வருகிறாள்
என்பதை   உணர்ந்து
அவர்களிடம்   புரிந்து   நடந்தாலே
ஒவ்வொரு   பெண்ணுக்கும்
புகுந்த   வீடும்
பிறந்த   வீடு   போல
சந்தோசம்   கொடுக்கும் .....................

என்   பதின்மூன்றாம்   வயதில்
பள்ளி   விடுமுறைக்காக
அத்தை   வீட்டில்
நீங்கள்   விட்டு   விட்டு
வந்த   பின்பு
உங்களை
பார்க்க   முடிய   வில்லையே
என்று   எண்ணி
நானும் ,  அக்காவும்
அங்கு   நீங்கள்   விட்டுச்   சென்ற
சட்டையை   வைத்துக்   கொண்டு
அழுததை
இன்னும்   மறக்கவில்லை   அப்பா .................

புதிய   உறவுகள்
புதிய   ஊர்
புதிய   மக்கள்
புதிய   அனுபவங்கள்
இவை   எல்லாமே
புதியது   என்றாலும்
ஒரு   பெண்ணுக்கு
இது   தான்   கடைசி   வரை
வரப்   போகின்ற
வாழ்க்கை   என்பதை
நான்   உணர்கின்றேன் .
அதனால்   தான்
நீங்கள்   எல்லோரும்
என்   மீது   காட்டிய   அன்பினை
அன்பின்   தூய்மையை ............
நான்   உங்களோடு
சந்தோசமாய்   வாழ்ந்த
கடந்தகால   நினைவுகளை
இவை   எல்லாவற்றையும்
என்   மனதுக்குள்
மிகவும்   பத்திரமாய்
புதைத்து   வைத்திருக்கிறேன் ...............
அவ்வப்போது   புரட்டிப்   பார்க்கிறேன் ...................

பெண்ணாய்ப்    பிறந்தாலே
பெற்றோர்களைப்    பிரிந்து
உடன்   பிறந்த   உறவுகளைப்   பிரிந்து
ஒரு   காலக்   கட்டத்தில்
சென்று   தான்   ஆக   வேண்டும் .
அந்தப்   பிரிவில்
வருத்தம்,   வேதனை
அதிகமாய்   இருந்தாலும்
வரவேற்று   தான்   ஆக   வேண்டும்
புதிய    வாழ்க்கைக்காக .....................

செப்டம்பர் 22, 2009

கவிதை பூக்கள்


காகிதத்  தோட்டத்தில்
வார்த்தைகள்  முளைத்தால்   தான்
கவிதை  பூக்கள்  பூக்கும் .....

ஆயிரமாயிரம்   கவிதை  பூக்கள்
வாசனை   மட்டும்   இராது ....
ஆனால் அதற்குள்
காதல்   இருக்கும் ......
இனிமை   இருக்கும் .......
சோகம்   இருக்கும் .....
விவேகம்   இருக்கும் ......

அற்புதமான கவிதை பூக்களை
வளர்ப்பதற்காகத்   தான்
எனது   காகிதத்   தோட்டம்
காத்து  கிடக்கின்றது .........

செப்டம்பர் 04, 2009

கனவுகள்


கடந்த   கால   கனவுகளை   எண்ணி
கண்ணீர்   வடிக்காதே.........
நிகழ்கால   கனவுகளை   மட்டும்
நினைத்துக்   கொண்டேயிரு
நிச்சயம்   வெற்றி
உன்   பக்கம்   தான் .........

உன்னைக்    கரை   சேர்க்காத
வெறும்   கற்பனைக்   கனவுகளை
தேடித்   தேடியே
உன்   நிகழ்கால   நிஜங்களை
தொலைத்து   விடாதே ...........

விழித்திரு
வசந்தம்
உன்   வாசல்   வரும்
நிச்சயமாய்..............

ஜூலை 23, 2009

உலகம் முடியும் வரை ஓர் யுத்தம்


மௌனமாய்
ஓர்   யுத்தம்
இரு   இதயங்களுக்கு
இடையில் .........
வெளியே
அமைதி   என்றாலும்
உள்ளுக்குள்ளோ
எங்களது
எதிர்காலக்   கனவுகள்
எரிமலையாய்
வெடித்து  சிதறுகின்றன ...........

எங்கள் இதயக்  கடலிலோ
இடைவிடாமல்
சுனாமி   அலையின்
தாக்குதல் ............
உள்ளுக்குள்ளோ
ஆயிரம்   முனங்கல்   சப்தங்கள்
யாருக்கும்   கேட்காதவாறு
ஒலித்து   கொண்டே   இருக்கின்றது
மிகவும்   மௌனமாய் ..........

இந்த   மௌன  யுத்தத்தில்
தோல்வியென்றால்
இருவரும்   வீழ்வோம்..........
வெற்றியென்றால்
இருவரும்  வாழ்வோம்...........

உலகம்   முடியும்  வரை
இப்படிப்பட்ட   மௌன  யுத்தங்கள்
தொடர்ந்து   கொண்டே   தான்   இருக்கும் .............

வானத்து தேவதை


நிலவுப்   பெண்ணே
வானமென்னும்
உன்   கருவண்ணக்   கூந்தலை
உலர   வைப்பதற்காகவா
எங்கும்   விரித்து   வைத்துள்ளாய் ..........

உன்   கருவண்ணக்
கூந்தலிலோ
தினமும்   மாலையில்
விண்மினிப்   பூக்கள்
அழகாய்   பூத்து   சிரிக்குதடி .....
அதைச்   சூடியவன்   யாரடி ?........

அழகாய்   முகம்   மட்டும்
காட்டுகின்றாய்.........
அவ்வப்போது   வெட்கப்பட்டு
மேகமென்னும்   கைகளால்
உன்   அழகு   ஒளி   முகத்தினையும்
மறைத்துக்   கொள்கின்றாயடி?........

நீயோ
இரவுச்   சூரியன் .........
சுட்டெரிக்காமல்
சுடராய்   மட்டும்
ஒளிர்கின்றாய் .........

உன்னைக்    கவி   பாடத்   தான்
எத்தனை   கவிஞர்கள்
உலகம்   தோன்றிய
நாள்   முதலாய் ..........
நீயோ   அதிர்ஷ்டக்காரியடி..........................

உனக்கு தெரியாமலேயே

உனக்காக
நான்   எழுதிய   கவிதைகள்
கடைசிவரை
நீ   படிக்கப்   படாமலேயே
தொலைந்து   போனது .
தொலைத்தது   நான்   தான் ........

உனக்கென்று
நான்   வீணடித்த
எனது    மணித்துளிகளை
கடைசிவரை
நீ   அறியாமலேயே
பிரிந்து   போய்   விட்டாய்...........

மௌனமாய்
காலம்   மட்டுமா
கடந்து   சென்றது .
கூடவே
மௌனமாய்   நீயும் ..........

உன்   நினைவுகள்   கூட
காயங்களைத்   தர
ஆரம்பித்து   விட்டது ........
நீ   தந்த
வலியிலிருந்து   மீளத்   தான்
வழியைத்   தேடுகின்றேன்
எனக்குள் .........

உன்னை   மறக்க   முடியாமல்
நான்   சிந்திய
கண்ணீர்த்   துளிகளை
கண்கள்   கூட
மறைத்து   விட்டது .............

உனக்கு   தெரியாமலேயே
உன்னை   எனக்குள்
சிறைப் படுத்தினேன்.
அதற்கு   நீ   கொடுத்த
தண்டனை   போதும் .........
தாங்குவதற்கோ
வலிமை   இல்லை .........
உன்னை   நான்
என்   மனச்   சிறையிலிருந்து
விடுதலை   செய்கின்றேன் ............
சுதந்திரமாய்   நானும்
சுற்றித்   திரிய
போகின்றேன்
எல்லைகளைத்    தாண்டி   விடாமல் ........